Last updated: 6 Sep, 2021

உண்மையான ஆரோவில்வாசியாக இருக்க: உலகிலும் அதேநேரத்தில் தெய்வீகத்திற்காகவும் எப்படி வாழ்வது என்பதை ஸ்ரீ அன்னை விளக்குகிறார்

உண்மையான ஆரோவில்வாசியாக இருக்க

1. முதல் தேவை சமூக, சன்மார்க்க, பண்பாட்டு பாரம்பரியத் தோற்றங்களுக்குப் பின்னால் உண்மையில் நாம் எதுவாக இருக்கிறோம். உண்மையில் நாம் யார் என்பதைக் கண்டுபிடித்தல்.

நமது ஜீவமையத்தில் சுதந்திரமான விரிவான ஞானமுள்ள ஒரு புருஷன் இருக்கிறான். அவனைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆரோவில் அவன் நமது ஜீவனின் செயல் மையமாகவும் நமது வாழ்வின் மையமாகவும் ஆகவேண்டும்.

2. சமூக சம்பிரதாயங்கள் ஒழுக்கம் சம்பந்தமான சம்பிரதாயங்களிலிருந்து விடுபடக் கருதியே ஒருவன் ஆரோவில்லில் வாழ்கிறான். ஆனால் இந்த சுதந்திரம் அகங்காரத்திற்கும் அதன் ஆசைகளுக்கும் பேரவாக்களுக்கும் புதுவகையில் அடிமையாவதாக இருக்கக் கூடாது.

ஆசைகளை நிறைவேற்றுதல் சைத்திய புருஷனைக் கண்டுபிடிப்பதற்கான வழியை அடைத்துவிடும். ஆசைகளை முற்றும் துறப்பதால் ஏற்படும் உள்ளத்தெளிவிலும் சாந்தியிலுமே சைத்திய புருஷனைக் கண்டுபிடிக்க முடியும்.

3. ஆரோவில்வாசி “எனது” என்னும் சொந்த உடைமை உணர்ச்சியை விட்டுவிட வேண்டும்.

இந்தச் சடஉலகில் நமது உயிர் வாழ்விற்கும் நாம் செய்யவேண்டிய வேலைக்கும் இன்றியமையாத தேவைகளெல்லாம், உலக வாழ்வில் நாம் வகிக்க வேண்டிய இடத்திற்கு ஏற்றபடி, நமக்கு அருளப்படும்.

நமது ஜீவனுடன் உணர்வுள்ள தொடர்பு அதிகரிப்பதற்கு ஏற்ப நமது வாழ்வுச் சாதனங்களும் சரியான அளவில் கிடைக்கும்.

4. உள்ளே உள்ள பொருளை கண்டுபிடிப்பதற்கு உழைப்பு – உடலுழைப்பும் - இன்றியமையாத ஒன்றாகும். நாம் உழைக்காவிட்டால், நமது உணர்வைச் சடத்தினுள் புகுத்தாவிட்டால், சடம் ஒருபோதும் அபிவிருத்தியடையாது. தன் உடலின் மூலம் உணர்வானது சிறு அளவுள்ள சடப் பொருளைச் சீரமைக்க அனுமதிப்பது மிகவும் நல்லது. நம்மைச் சுற்றிலும் ஒழுங்கை உண்டாக்குவது நம்முள்ளே ஒழுங்கை உண்டாக்க உதவும். நாம் நமது வாழ்வை ஒழுங்குபெற அமைக்க வேண்டும். ஆனால், அதைச் செயற்கையான புறவிதிகளின்படி செய்யாமல் சீராக அமைந்த ஓர் உள்உணர்வின்படி செய்யவேண்டும். வாழ்வை உயர் உயர்வின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தாமல் விட்டுவிட்டால் அது சிதறிப் போகும். எதையும் சரியாக வெளிப்படுத்தாது. சடப்பொருளை உணர்வுடன் பயன்படுத்தாவிட்டால் அது காலத்தை வீணாக்குவதாகும்.

5. புதிய இனத்தின் வருகைக்காகவே உலகம் முழுவதும் தன்னை ஆயத்தம் செய்துகொள்ள வேண்டும். இந்த வருகையைத் துரிதப்படுத்த ஆரோவில் உணர்வுடன் உழைக்க விரும்புகிறது.

6. சிறிது சிறிதாக இப்புதிய இனம் எப்படி இருக்கும் என்று வெளிப்படுத்தப்படும், அதற்கிடையில், நம்மை முற்றிலும் இறைவனுக்கு நிவேதித்துவிடுவதே சிறந்தவழி.

ஸ்ரீ அன்னை

[1971-இன் இறுதியில் இது வெளியிடப்படும்போது, ஸ்ரீ அன்னை மேலும் கூறினார்:]

தெய்வீகத்துடன் இணைந்தால் மட்டுமே உண்மையான சுதந்திரம் கிடைக்கும். ஒருவர் தனது அகங்காரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே அவர் தெய்வீகத்துடன் ஒன்றிணைய முடியும்.